Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார்

நவம்பர் 28, 2019 04:40

மும்பை: மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ந் தேதி அதிகாலை 5.37 மணிக்கு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டதால், தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்-மந்திரியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது. உத்தவ் தாக்கரே கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தபோது எடுத்த படம்.

நேற்று முன்தினம் மாலை மும்பையில் நடைபெற்ற 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் மூன்று கட்சி தலைவர்களும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அப்போது தங்களுக்கு 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி அவர்கள் கடிதம் கொடுத்தனர்.

அதை ஏற்று புதிய அரசு அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுத்த கவர்னர், வருகிற டிசம்பர் 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு ‘கெடு’ விதித்தார். கவர்னர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து கூட்டணி அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளில் 3 கட்சிகளின் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

உத்தவ் தாக்கரே நேற்று காலை தனது மனைவி ராஷ்மியுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது தன்னை ஆட்சி அமைக்க அழைத்ததற்காக கவர்னருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை 6.40 மணிக்கு, சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இங்குதான் பால்தாக்கரே ஒவ்வொரு ஆண்டும் தசரா பொதுக்கூட்டத்தை நடத்தி தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றி வந்தார். இங்கு நடைபெறும் விழாவில் புதிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

உத்தவ் தாக்கரேவுடன் 3 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 15 மந்திரி பதவிகளும், காங்கிரசுக்கு 13 மந்திரி பதவிகளும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்